October 31, 2007

கம்யூனிஸ்ட்-ஆர்எஸ்எஸ் மோதல்: கம்யூ பிரமுகர் படுகொலை, பாலக்காட்டில் பந்த்

கம்யூனிஸ்ட்-ஆர்எஸ்எஸ் மோதல்: கம்யூ பிரமுகர் படுகொலை, பாலக்காட்டில் பந்த்:

பாலக்காடு: பாலக்காடு அருகே கம்யூனிஸ்ட் பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதால் இன்று பாலக்காடு முழுவதும் பந்த் அனுசரிக்கப்படுகிறது.பாலக்காடு அருகேயுள்ள கடுங்காங்குன்னு பகுதியைச் சேர்ந்தவர்கள் கோபாலகிருஷ்ணன்(45) மற்றும் ரவீந்தர்(34). உறவினர்களான இவர்கள் இருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள்.கடந்த சில மாதங்களாக கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களுக்கும், பாஜக, ஆர்எஸ்எஸ் கட்சியினருக்கும் கடுங்காங்குன்னு பகுதியில் கடும் மோதல் நடந்து வருகிறது.மோதலை தவிர்ப்பதற்காக கடந்த 3 மாதங்களாக அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு லேசான அமைதி திரும்பியதால் 2 வாரங்களுக்கு முன் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது.இந் நிலையில் நேற்றிரவு கோபாலகிருஷ்ணனும், ரவீந்திரனும் பைக்கில் வந்து கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் இவர்கள் இருவரையும் வழிமறித்து அரிவாளால் கொடூரமாக வெட்டி தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.இதில் படுகாயமடைந்த கோபாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.ரவீந்திரன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த கொலை சம்பவம் குறித்து பாலக்காடு மாவட்ட எஸ்பி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.கம்யூனிஸ்ட் பிரமுகர் கோபாலகிருஷ்ணன் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து இன்று பாலக்காடு மாவட்டம் முழுவதும் பந்த நடத்த அக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.இன்று காலை முதல் பாலக்காடு மாவட்டம் முழுவதும் பஸ், லாரி, ஆட்டோ எதுவும் இயங்கவில்லை. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் எதுவும் திறக்கப்படவில்லை.இந்த பந்த்தால் பாலக்காடு முழுவதும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், தமிழகத்திலிருந்து பாலக்காட்டுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

0 comments: