October 21, 2007

'ரமணா' பாணியில் இறந்த சிறுமிக்கு சிகிச்சை!!

புதுச்சேரி: ரமணா படத்தில் வருவது போல, இறந்து போன சிறுமிக்கு தனியார் மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை செய்து பணம் கறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர், வீரபோகம் பகுதியைச் சேர்ந்தவர் கொளஞ்சியப்பன். இவரது மகள் சிந்துஜா (7). இவர் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்காக புதுச்சேரி, காலாப்பட்டில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் கடந்த 10ம் தேதி சேர்த்தார் கொளஞ்சியப்பன். சிகிச்சை பெற்று வரும் சிறுமிக்கு அருகில் உறவினர்கள் இருந்துள்ளனர். இரவு அவர்கள் வெளியே சென்றிருந்தபோது, மருத்துவமனை ஊழியர்கள் அந்த சிறுமியை பிணவறைக்கு தூக்கி சென்றுள்ளனர். ஆனால் அதற்குள் திடீரென்று உறவினர்கள் வந்துவிட்டதால் சிந்துஜாவின் உடலை பிணவறையில் போட்டு விட்டு ஓடிவிட்டார்களாம். அதன் பிறகுதான் சிந்துஜா ஏற்கனவே இறந்து போய் விட்டது தெரிய வந்துள்ளது. இறந்து ேபான சிந்துஜாவுக்கு அறுவைச் சிகிச்சை என்ற பெயரில் டாக்டர்கள் பணம் கறந்தது புரிய வந்து அதிர்ந்தனர்.இதையடுத்து டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் பிரிவு அமைப்பினரும், லோக் ஜனசக்தி கட்சியினரும் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு வாயிலில் சிறுமியின் பிரேதத்தை போட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல் அறிந்து போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மருத்துவமனை நிர்வாகமும் சம்பந்தப்பட்ட மருத்துவரின் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தது. பின்னர் சிறுமியின் உடலை புதுவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் தந்தை கொளஞ்சியப்பன் கூறுகையில், கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென்று இறந்துவிட்டதாக சொல்லி எங்களுக்கு தெரியாமல் சவக்கிடங்கு ஊழியர்கள் சிறுமியை தூக்கி சென்றனர்.இதுவரை 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவழித்து விட்டோம். இந்த பிரச்சனையில் முறையான நீதி கிடைக்கவில்லை என்றால் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார்.

0 comments: